x

A. Dakshinamurthy

அ.தட்சிணாமூர்த்தி (பிறப்பு: 1938) சங்க இலக்கியத்தில் புலமைபெற்ற முதிர்ந்த தமிழறிஞர். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு முன்னோடிகளில் ஒருவர். பத்தொன்பது செம்மொழி இலக்கியங்களை ஆங்கிலப்படுத்தியவர்; அகநானூற்றினை முழுமையாக ஆங்கிலப்படுத்திய முதல் தமிழறிஞர். செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத்தொகுதியின் பதிப்பாசிரியர்; பாரதிதாசனின் பாடல்களை மொழிபெயர்ப்பின் மூலம் வெளியுலகுக்குக் கொண்டுசென்றவர். பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், அண்மைக்கால இலக்கியங்கள் என்று முப்பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். தமிழர் நாகரிகமும் பண்பாடும் எனும் வரலாற்று நூலைப் படைத்தவர். சங்க இலக்கிய உரைகள் மற்றும் ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆசிரியர். 2003 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் பாரதிதாசன் விருதை வென்றவர். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 2015-ஆம் ஆண்டுக்கான குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினைப் பெற்றவர். தட்சிணாமூர்த்தி அய்யாசாமி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள நெடுவாக்கோட்டை என்னும் சிற்றூரில் மிக எளிய உழவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தம் குடும்பதின் முதல் பட்டதாரி ஆவார். பள்ளிப்படிப்பை மன்னார்குடி பின்லே பள்ளியில் முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.ஏ. (ஆனர்ஸ்) - தமிழ்மொழியும் இலக்கியமும் (1961), பி.எட்., தமிழ்மொழியும் சமூகவியலும் (1962) பயின்றார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் "ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை" எனும் தலைப்பில் ஆய்வு செய்து தமிழில் எம்.பில் பட்டமும் (1978-79), "சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்" எனும தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் (1988) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர்கள் தெ.பொ. மீனாட்சிசுந்தரம், தண்டபாணி தேசிகர் ஆகியோரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1962-இல் திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர், தொடர்ந்து 33 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகவும் பேராசிரியராகவும் பல கல்வி நிலையங்களில் பணியாற்றினார். 1996-ல் பணி ஓய்வுக்குப்பின் தஞ்சை நகரத்தில் வசித்து வருகிறார்.

Related Products