Karichankunju
ஆர்.நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) தமிழ் எழுத்தாளர். நாராயணசாமி, தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும், வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார். எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி, அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைபெயர் “கரிச்சான்”). சென்னையில் இராமகிருஷ்ணா பள்ளி, அதன்பின் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளி, விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளி, மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1940-ல் ஏகாந்தி என்ற புனைபெயரில், இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது. திருலோக சீதாராம், திருச்சியிலிருந்து நடத்தி வந்த 'சிவாஜி' எனும் இதழில் தொடர்ந்து கதைகளை எழுதினார். சுமார் இருநூறு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது பல கதைகள் இன்னும் தொகுக்கப்படவில்லை.