x

A.Muthukrishnan

அ.முத்துக்கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 1973-ஆம் ஆண்டு பிறந்தவர். தென்னிந்தியாவின் மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதராபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986-ல் மதுரைக்கு திரும்பினார்.. அக்காலகட்டத்தில், மதுரையில் அவர் படித்த துறையில் வேலை வாய்ப்புகள் இல்லாததால், வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார். அதன்பின் சொந்தமாகப் பல தொழில்கள் செய்தார். 1988-ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த அவர் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பில் 1991-ஆம் ஆண்டு இளநிலை படித்து முடித்தார். பல்வேறு தொழில்கள் மற்றும் வேலை பார்த்த முத்துகிருஷ்ணன், இளம்வயதில் பிற மாநிலங்களிலேயே பள்ளிப் படிப்பை பயின்றதால் 1996-ஆம் ஆண்டுதான் தமிழைக் கற்றார் . விளிம்புநிலை மக்கள், மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் தீண்டாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அவர் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறசூழல், உலகமயம், மனித உரிமைகள் எனப் பல்வேறு தளங்களில் தனது சமூக செயற்பாடுகளைத் தொடங்கினார். உலக அளவில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து தொடர்ந்து வருகிறார். தமிழ் நாளிதழ்களிலும் மாதாந்திர இதழ்களிலும் வார இதழ்களிலும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல், தீண்டாமை, அரசியல், விளிம்புநிலை மக்கள், வாழ்வியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் பெரு நிறுவனங்களால் எங்கெல்லாம் மக்கள் சுரண்டப்படுகிறார்களோ பாதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சென்று உண்மை நிலையை அறிந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பந்தமாக குஜராத் மாநிலத்திற்கும் விதர்பா விவசாயிகளின் தற்கொலை பற்றி அறிய மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரித்துக் கொன்றது தொடர்பாக அறிய காந்தமால் நகரத்திற்கும் போஸ்கோ திட்டத்தைப் பற்றி அறிய ஒடிசா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள உண்மை நிலையை அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்காக நேரில் கள ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக ஏற்படுத்தப்படும் உண்மை கண்டறியும் குழுவில் ஒரு உறுப்பினராக பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்துள்ளார். எட்டு நாடுகளின் வழியே 10000 கி.மீ. தரைவழியே பயணித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு சென்ற சர்வதேச குழுவில் இடம் பெற்றவர். ஜோர்டானில் நிகழ்ந்த பாலஸ்தீன நிலமீட்பு போராட்டத்தில் பங்கு கொண்டவர். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை முதலாவதாக தமிழில் தந்தவர். இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "அப்சலைத் தூக்கிலிடாதே" மற்றும் "தோழர்களுடன் ஒரு பயணம்" என்ற இரு நூல்களையும் "குஜராத் 2002 - இனப்படுகொலை", "அமைதிக்காகப் போராடுவோம்", "மதவெறி" மற்றும் “குரலின் வலிமை” நூல்களையும் தமிழில் மொழிபெயர்துள்ளார். புரட்சியாளர் சே குவாரா பற்றிய ஆவணப்படத்தை 2002-ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டதன் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை பரவலாக பெற்றார். ஸ்டார் விஜய் தொலைகாட்சியின் 'நீயா நானா' மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'புதுப்புது அர்த்தங்கள்' போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூகம் சார்ந்த உரையாடல்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.இவரது தூங்காநகர நினைவுகள் புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பசுமை நடை : 2010-ஆம் ஆண்டு மதுரை யானைமலையைக் காக்கும் பொருட்டு முத்துகிருஷ்ணன் ஆரம்பித்த "பசுமை நடை" என்ற பயணத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று ‘பசுமை நடை’ பயணம் நடைபெறுகிறது. இதுநாள் வரையிலுமான பசுமை நடையில் தொகுக்கப்பட்ட ஆவணங்களை ‘மதுரை வரலாறு- சமணப் பெருவெளியின் ஊடே..’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. .

Related Products