Anuradha Ramanan
அனுராதா ரமணன், (ஜூன் 29, 1947 – மே 16, 2010) தமிழ் எழுத்தாளர். பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. இவரது படைப்புகள் சில தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977-ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது. 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 365 நெடுங்கதைகளையும் 480 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘சிறை’ சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ‘கூட்டுப்புழுக்கள்’, ‘மலரின் பயணம்’, ‘ஒரு வீடு இருவாசல்’ ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவற்றுள் கே.பாலசந்தர் தமிழில் இயக்கிய ‘ஒரு வீடு இரு வாசல்’ திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருதினை 1991-ல் பெற்றது. இவரது கதையைக் கொண்டு 1988-ல் வெளியான ‘ஒக்க பாரிய கதா’ (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது. மே 16, 2010-ல் சென்னையில் தனது 63- வது வயதில் இவர் மறைந்தார்.