Anuthama
அநுத்தமா (16 ஏப்ரல் 1922 – 3 திசம்பர் 2010) தமிழ் எழுத்தாளர் ஆவார். ராஜேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் 300 சிறுகதைகள், 22 நாவல்கள், 15-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். 1950 - 60களில் நடுத்தரவர்க்கப் பெண்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் படைப்புகளை எழுதியவர். தமிழ்நாட்டின் 'ஜேன் ஆஸ்டென்' என்று புகழப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவையாகும். மெட்ரிகுலேசன் வரை படித்த அநுத்தமா தன் சொந்த முயற்சியில் இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றார். தனது 25-வது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” நாவல் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் எழுதத்தொடங்கினார். 1956-ல் இவருடைய 'பிரேமகீதம்' என்ற நாவல் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் விருதினைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்ப மரத்து பங்களா ஆகிய அநுத்தமாவின் நாவல்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார்.