Appanasaamy
அப்பணசாமி (பிறப்பு: 27-5-1961) எட்டையபுரத்தில் பிறந்தார். சிறுவயதில் குடும்பத்தில் அதிக வறுமை தாண்டவமாடியது. பள்ளி முடிந்து வந்ததும் அம்மாவுக்கு உதவியாக தீப்பெட்டிக் கட்டு ஒட்ட உதவி செய்ய வேண்டும். தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடிய அந்தக் காலத்தில் மணியாச்சி, மந்தித்தோப்பு என பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் சுமந்துவரவேண்டும். பல நாள்களில் ஒட்டிய தீப்பெட்டிகளை தீப்பெட்டி ஆபீசுகளுக்கு எடுத்துச் சென்று அளந்து கொடுத்த பிறகே பள்ளிக்குச் செல்ல முடிந்தது. மற்ற பையன்கள் விளையாடிக்கொண்டிருக்க அவர் மட்டும் தீப்பெட்டிக் கட்டு ஒட்ட வேண்டும். அந்த பசையின் நாற்றம் சகிக்க முடியாது. இதனால் தப்பித்து தஞ்சம் அடைந்த இடம்தான் அவரின் வீட்டின் அருகில் ஒரு பழைய பிரமாண்டமான கட்டடத்தில் இயங்கி வந்த பொது நூலகம். குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து நாள் முழுவதும் வாசிக்கத் தொடங்கியுள்ளார். கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், கல்கி, வல்லிக்கண்ணன் என பெயர் தெரியாமலேயே முக்கிய ஆளுமைகளின் படைப்புகளை வாசித்திருக்கிறார். இப்படி 12 வயதில் தொடங்கிய தீவிர வாசிப்புப் பழக்கம் தனது சுவாசமாகவே மாறி விட்டது என்கிறார் அப்பணசாமி. மாணவர்களாக தீவிர இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டதைக் கண்ட கோவில்பட்டி மூத்த எழுத்தாளர்கள் பூமணி, கிருஷி, தாமிரன் (பால்வண்ணம்), தேவதச்சன், கௌரிசங்கர், அப்பாஸ், ஜோதிவிநாயகம் ஆகியோர் இளைஞர்களை படைப்பிலக்கியத்தில் ஈடுபட ஊக்கப்படுத்தினர். இவர்கள் மூலம் கி.ராஜநாராயணன் அறிமுகம் கிடைத்தது. அப்போது கி.ரா.கொடுத்த ஊக்கத்தால் அப்பணசாமி எழுதிய முதல் சிறுகதை, செம்மலர் மே 1981 இதழில் வெளியானது. 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பங்கெடுத்த அனுபவத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் பிரிவு ஆலோசகராக பணியாற்றுகிறார். அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ள அப்பணசாமி இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.