Aristotle
அரிஸ்டாட்டில் (கி.மு.384 - கி.மு.322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல்துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல்(தருக்கம்), சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும். பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிஸ்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவனர் ஆவார். அரிஸ்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், அளவையியல், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிஸ்டாட்டிலின் நோக்கீடுகள் (அவதானிப்புகள்) விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை 19-ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும், சாக்ரட்டீஸூம் முப்பெரும் கிரேக்க மெய்யியலாளர்களாவர். பிளேட்டோ, அரிஸ்டாட்டிலின் குரு. சாக்கிரடீஸின்(கி.மு.470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. பேரரசர் அலெக்சாண்டர், அரிஸ் டாட்டிலின் சீடர் ஆவார். அரிஸ்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், லத்தீன், சிரியாக், அரபி, இத்தாலியம், பிரெஞ்ச், எபிரேயம், ஜெர்மானியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.