Aru.Ramanathan
அரு.ராமநாதன், (1924 - 1974) சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். இவரது முதல் படைப்பு இவரது 18 வயதில் எழுதப்பட்ட சம்சார சாகரம். 1000 முறை மேடையேறிய "ராஜராஜ சோழன்" என்கிற நாடகத்தை 1945-ஆம் ஆண்டு டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய போட்டிக்கு அனுப்பினார். இது முதல்பரிசு பெற்றது. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. பெரும் விவாதத்தை எழுப்பிய "காதல்" என்கிற இதழை 1947-ல் உருவாக்கி பிரசுரித்தார். இவர் எழுதிய முதல் சிறுகதை ‘கோழிப் பந்தயம்’ .தொடர்ந்து அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் நாவல் ‘அசோகன் காதலி’. இவரது சிறந்த படைப்பாக கருதப்படும் "வீரபாண்டியன் மனைவி" பத்திரிக்கையில் ஏழு ஆண்டுகள் தொடராக வந்தது. பின்னர் அது நூலாக மூன்று பாகங்களாக வெளிவந்தது. இவர் எழுதிய நாடகங்கள்: 'வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘. ராஜராஜ சோழன் திரைப்படம் உட்பட ‘பூலோக ரம்பை’, ‘ஆரவல்லி’ ஆகிய படங்களுக்கும் கதை - வசனம் எழுதியுள்ளார். அரு.ராமநாதன் 1974-ஆம் ஆண்டு மறைந்தார்.