A.Vennila
அ.வெண்ணிலா (பிறப்பு: 10 ஆகஸ்ட், 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கி வருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெண்ணிலா பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வரை வந்தவாசியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் பின்னர் உளவியலில் முதுநிலை, வணிகவியலில் முதுநிலை பட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து கல்வியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய வெண்ணிலா தன்னுடைய 27-வது வயதில் எழுதத் தொடங்கினார். ஏழு கவிதை நூல்கள், ஒரு கடித இலக்கிய நூல், ஏழு கட்டுரைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஓர் ஆய்வு நூல் பதிப்பாசிரியராக இரண்டு நூல்கள், ஐந்து தொகுப்பு நூல்கள் என வெண்ணிலாவின் இலக்கியப் படைப்புகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், நவீன வாழ்வியல், உணவு முறைகள், பெண்கள் சந்திக்கும் இன்னல்கள்[6] போன்ற சமகாலச் சிக்கல்கள் குறித்த சிந்தனைகள் இவரது அனைத்து வகை இலக்கியங்களிலும் இடம்பெறுகின்றன. வரலாற்றை மறுவாசிப்பிற்குத் தூண்டும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி பதிப்பித்துள்ளார். கரிசல் இலக்கியவாதி கி.ராவின், ‘கதை சொல்லி’ மற்றும் ‘புத்தகம் பேசுது’ இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவராக வெண்ணிலா செயல்பட்டுள்ளார். அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடந்த பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் தமிழகத்தின் பிரதிநிதியாக வெண்ணிலா பங்கேற்றுள்ளார். ‘சகுந்தலாவின் காதலன்’ என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாகவும், துணை இயக்குனராகவும் வெண்ணிலா பணியாற்றியுள்ளார். இரண்டு திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். ராசேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு இவர் எழுதிய ‘கங்காபுரம்’ என்ற வரலாற்று நாவல் அதிகம் பேசப்பட்டதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. நவீனப் பெண் எழுத்தாளர்களில் வெண்ணிலா தான் வரலாற்று நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 85 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதை உலகில் இடம்பெற்றுள்ள பெண்களான இராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரையிலான பல பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து இவர் உருவாக்கிய மீதம் இருக்கும் சொல் என்ற கதைத் தொகுப்பு தமிழுலகிற்கு ஒரு வரலாற்று ஆவணமாக உள்ளது. ‘கனவைப் போல மரணம்’ என்ற தலைப்பிலான இவர் நூலை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2007-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசு வழங்கியது.