x

Azhagiya periyavan

அழகிய பெரியவன் பிறப்பு: மார்ச் 3, 1968) தமிழ் எழுத்தாளர், .நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். பேரணாம்பட்டுக்கு அருகில் உள்ள சாத்கர் என்ற கிராமத்தில் இருக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இவர் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்தார். பின்னர் ஆம்பூரில் உள்ள தேவலாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், தொடர்ந்து ஆம்பூரில் இருக்கும் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளி வகுப்பு வரையிலும் படித்தார். விலங்கியல் இளம் அறிவியல் பட்டப்படிப்பை வேலூரில் இருக்கும் ஊரீசு கல்லூரியில் படித்து முடித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார். தற்பொழுது வேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தெளிந்த அரசியல் புரிதலுடன் தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானதொரு படைப்பாளியாக இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவர் எழுதிய சிறுகதை முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாமரை இதழில் வெளிவந்தது. தீட்டு என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு 2000-ஆம் ஆண்டில் தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியானது. தமிழில் வெளிவரும் பல முன்னணி பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தான் எழுதிய ‘தகப்பன் கொடி’ என்ற நாவலுக்காக 2003- ஆம் ஆண்டும், 'உனக்கும் எனக்குமான சொல்' என்ற கவிதை நூலுக்காக 2010- ஆம் ஆண்டும் இரண்டு முறை தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய பல கதைகளும், கவிதைகளும், ஆங்கிலம், செக், இந்தி, உருது, வங்காளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மலையாள மொழியில் அழகிய பெரியவனின் இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன.

Related Products