Balakumaran
பாலகுமாரன் (ஜூலை 5, 1946 - மே 15, 2018) அதிக எண்ணிக்கையிலான நாவல்கள் எழுதிய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இவர் 200-க்கும் மேற்பட்ட நாவல்கள், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் திரைக்கதை - வசனங்களையும் எழுதியுள்ளார். பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் 1946-ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969-ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் துவங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் டாஃபே டிராக்டர் நிறுவனத்தில் பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். நாயகன், தளபதி உள்ளிட்ட 27 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ‘இது நம்ம ஆளு’ என்னும் திரைப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் மேற்பார்வையில் இயக்கினார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் ‘உடையார்’, ‘கங்கைகொண்ட சோழன்’ ஆகிய இரு நாவல்களும் பெரிய அளவில் வாசிக்கப்பட்டன. இவற்றில் ‘உடையார்’ (ஆறு பாகங்கள்) பாலகுமாரனின் முக்கியமான படைப்பாகும். ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தின் விரிவான சித்தரிப்பையும், தஞ்சைப் பெரியகோயில் அமைத்தல் என்னும் நிகழ்வின் பெருங்காட்சியையும் விரிவாக விளக்கியதால், அந்நாவல் அதிகமானவர்களால் வாசிக்கப்பட்டது. பாலகுமாரன் 2018 - ஆம் ஆண்டு, மே 15 - ஆம் நாள் மறைந்தார்.