Charles Dickens
சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (7,பி ப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கில நாவல் எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அது, அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை. திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி.கே.செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர். டிக்கென்சின் நாவல்களும், சிறுகதைகளும் அவற்றின் புகழ் காரணமாக தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல நாவல்கள் தொடக்கத்தில் வார மற்றும் மாத இதழ்களில் தொடராக வெளிவந்தவை. இது, அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கும் முன்னரே நாவல் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒவ்வொரு வாரமும், மாதமும் பகுதி பகுதியாகவே அவரது நாவல்களை எழுதினார். இந்த பகுதி எழுத்து முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும், அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி அவர் எழுத வசதியானது.