Charles Robert Darwin
சார்லஸ் ராபர்ட் டார்வின் (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இதுவரை வாழ்ந்த உயிரியலாளர்களில் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராக இன்றும் விளங்குகிறார். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை, ஓர் அடிப்படையான, புரட்சிகரமான அறிவியற் கொள்கையாகும். இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859-ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது அக்காலம் முதல் இன்றுவரை, அறிவியல் புரட்சியை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நூலாகும். இவர், கடல் வழியே எச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம், குரங்கு இனத்திலிருந்து பிரிந்த இனம் என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவையாகத் திகழ்கின்றன.மனிதன், விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது என்பதை முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார். அதாவது, அனைத்து உயிரினங்களிலும் , 'சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்களே, பூமியில் தப்பித் பிழைத்து உயிர் வாழும்' உள்ளிட்ட, இயற்கையியல், விலங்கியல் மற்றும் உயிரியல் அடிப்படைக் கோட்பாடுகளை முதன்முதலில் கண்டறிந்துக் கூறியவர் டார்வினேயாவார்.