C.N.Annadurai
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (15 செப்டம்பர், 1909 - 03 பிப்ரவரி, 1969) ஓர் அரசியல்வாதியும், ‘மெட்ராஸ்’ என்ற பெயர் கொண்டிருந்த தமிழ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்ட பின்னர் பொறுப்பு வகித்த (மெட்ராஸ் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றியவரும் இவரே). முதலாவது தமிழ்நாடு முதலமைச்சருமாவார். இவர் ‘அறிஞர் அண்ணா’ எனவும் ‘பேரறிஞர் அண்ணா’ எனவும் மக்களால் அழைக்கப்படுகிறார். இந்தியா குடியரசான பிறகு, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த, காங்கிரஸ் அல்லாத முதலாவது திராவிடக் கட்சித் தலைவரும் (தி.மு.க.), அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் இவரே ஆவார். ஏராளமான நாவல்களும், நாடகங்களும், சிறுகதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களும், திரைக்கதைகளும் எழுதியவர் அண்ணா. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக முதன்முதலாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணா. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்பு முறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் வேலைக்காரி (1949), ஒர் இரவு ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் மிகப்பெரிய பிரச்சாரங்களாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.