x

C.S.Chellappa

சி.சு.செல்லப்பா எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற மாத இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். பல நல்ல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் “வாடிவாசல்”, "சுதந்திர தாகம்" ஆகியவற்றை எழுதியவர். காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால், தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970-ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119-வது இதழுடன் ‘எழுத்து' நிறுத்தப்பட்டது. சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வு, குறுநாவல், நாடகம், கவிதைகள் என 25 நூல்களுக்கு மேல் எழுதிய சி.சு.செல்லப்பா, 1998-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி மறைந்தார். இவரது 'சுதந்திர தாகம்' நாவலுக்கு, 2001-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products