Devan
தேவன் அல்லது ஆர்.மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும், கட்டுரைகளையும் ‘தேவன்’ என்ற புனைபெயரில் எழுதியவர். ‘துப்பறியும் சாம்பு’ இவரது பிரபலமான படைப்பாகும். தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி, மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். அதன் மூலம், கதை எழுதுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்கோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின், தனது 21-ஆவது வயதில், ‘ஆனந்த விகடன்’ வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை அந்த இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்களை எழுதினார். 50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதிய ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ புத்தகமாக வெளியாகியுள்ளது. ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ புதினம், 1974-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தேவன், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்திருக்கிறார்.