x

Fyodor Dostoevsky

பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி (1821 – 1881) பரவலாக 'தஸ்தயெவ்ஸ்கி' என அழைக்கப்படுபவர் ஒரு ரஷ்ய நாவல் எழுத்தாளரும், சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும், பத்திரிக்கையாளரும், தத்துவவாதியும் ஆவார். 19-ஆம் நூற்றாண்டு ரஷ்யாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனத்தின் ஆழங்களை ஆராய்பவை இவரது படைப்புகள். பல்வேறு வகையான தத்துவ ஆன்மீகப் பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவரின் முதல் நாவல் "புவர் ஃபோக்". இக்கதை 1846-ல் பிரசுரமானபோது இவரின் வயது 25. "குற்றமும் தண்டனையும்" (1866), "அசடன்" (1869), "அசுரர்கள்" (1872) மற்றும் "கரமசோவ் சகோதரர்கள்" (1880) ஆகியன இவரது முக்கிய படைப்புகள். 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் எழுதியுள்ள தஸ்தயேவ்ஸ்கி, நிறைய புனைவு அல்லாதவற்றையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு. இவர் 1864-ஆம் ஆண்டு எழுதிய “இருளுலகிலிருந்து நாட்குறிப்புகள்” தொடக்க கால இருத்தலியல் படைப்புகளில் ஒன்று. தஸ்தயேவ்ஸ்கிக்கு இலக்கியம், இளமையிலேயே குழந்தைக் கதைகள் சாகசக்கதைகள் மூலமாக அறிமுகமானது. பின்னர் பல்வேறு உருசிய உலக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்தார். 1837-ல் பதினைந்து வயதானபோது தாயார் இறந்த காலத்திலேயே பள்ளியிலிருந்து நின்று “நிகோலயேவ் இராணுவ பொறியியல்” மையத்தில் சேர்ந்தார். பின் பொறியியலாளராக வேலையில் சேர்ந்து நல்ல ஊதியம் பெற்றபோதே, மேலும் பணத்திற்காக மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்திருக்கிறார். 1840-களின் நடுவில் அவர் எழுதி வெளிவந்த முதல் நாவலான ‘புவர் ஃபோக்’ செயின்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இலக்கிய வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. ருஷ்யப் பேரரசை விமர்சித்ததால், இவரின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. இவரின் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை விவாதித்த இலக்கிய அமைப்பில் இருந்தமைக்காக இவர் 1849-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை கடைசி நிமிடங்களில் ரத்தானது. தண்டனை குறைக்கப்பட்டு சைபீரியச் சிறையில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பிறகு மேலும் ஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார். இதற்குப் பிறகான வருடங்களில் தஸ்தயேவ்ஸ்கி பத்திரிக்கையாளராக, பல்வேறு இதழ்களைத் தொகுப்பவராகவும் பதிப்பிப்பவராகவும் இருந்திருக்கிறார். “எழுத்தாளனின் நாட்குறிப்பு” என அது வெளியாகியுள்ளது. பின்னர் மேற்கு ஐரோப்பாவில் தனது பயணங்களைச் செய்தபோது தொடர்ந்து சூதாடுபவராக ஆனார். அது பல்வேறு பணச்சிக்கல்களைக் கொண்டு வந்தது. ஆனாலும் அதே காலங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட புகழ்மிக்க ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவருடைய நூல்கள் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புஷ்கின், ஷேக்ஸ்பியர், கொகோல், செர்வாண்டேஸ், பிளாட்டோ போன்ற பல்வேறு ஆளுமைகளால் கவரப்பட்ட இவர் செகாவ், நீட்ஷே, ஹெமிங்வே, அயன் ராண்ட், பிராய்ட் போன்ற பல்வேறு வேறு ஆளுமைகளைக் கவர்ந்தவராகவும் இருந்தார்.

Related Products