x

Inkulab

இன்குலாப் (பிறப்பு: 1944 - இறப்பு: டிசம்பர் 1, 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. ‘இன்குலாப்’ என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ.சாகுல் ஹமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இஸ்லாமியச் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன், கா.காளிமுத்து, பா.செயப்பிரகாசம், ஆகியோருடன், இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார். கம்யூனிஸ்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு, மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும், அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார். இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் என, பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ என்னும் இவர் எழுதிய பாடல் எண்ணற்ற மேடைகளில் பல்வேறு மக்களால் பாடப்படுகிறது. 2017-ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது. ஆனால், அவர் குடும்பத்தினர் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

Related Products