Jothimani Sennimalai
ஜோதிமணி சென்னிமலை (பிறப்பு 9 ஆகதஸ்ட் 1975) தமிழ் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்தார். இவர், சில ஆண்டுகள் இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்தார். இவர் தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவராவார். இது, இவரது அரசியல் வாழ்வில் இந்தியா மற்றும் பிற நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு உதவியாக இருந்துள்ளது. இவர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியின், பெரிய திருமங்கலத்தில், 1975 ஆகஸ்ட் 9 அன்று பிறந்தார். இவரது தந்தையான சென்னிமலை ஒரு விவசாயி ஆவார். ஜோதிமணி தனது குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். இவரது தாயார் முத்துலட்சுமியால் வளர்க்கப்பட்ட இவர் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் என்.எஸ்.எஸ் முகாம்கள் மற்றும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக கலந்துகொள்பவராக இருந்தார். 2006 முதல் 2009 வரை இவர் தமிழ்நாட்டு திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக இருந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகம், 2003-ல், முதுகலை பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் , 2005-ஆம் ஆண்டு, ஆய்வியல் நிறைஞர், பட்டம் பெற்றார்.
22 வயதில் அரசியலில் நுழைந்த ஜோதிமணி, இந்திய இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக ஆனார். இந்திய இளைஞர் காங்கிரசின் பேராளராக 2006-ஆம் ஆண்டு அமெரிக்க ஒன்றியத்தில் நடந்த, ஆசிய இளம் தலைவர்கள் உச்சி மாநாடு மற்றும் 2009-ல் மலேசியாவில் நடைபெற்ற இளம் அரசியல் தலைவர்களுக்கான உச்சி மாநாடு போன்றவற்றில் கலந்துகொண்டுள்ளார். மேலும் 2010-ல் தில்லியில் நடந்த இன்றியமையாத- ஆசிய பெண் தலைவர் குரல் என்ற தலைவர்கள் கூடலில் கலந்து கொள்ள இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோதிமணி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 (தோல்வி) மற்றும் இந்தியப் பொதுத் தேர்தல், 2014 (தோல்வி), 2019 (வெற்றி) ஆண்டுகளில் போட்டியிட்டுள்ளார்.
இவர் எழுதியுள்ள நூல்கள்
ஒற்றை வாசனை - சிறுகதைத் தொகுப்பு
சித்திரக் கூடு - நாவல்
நீர் பிறக்கும் முன்
விருதுகள்
சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது - 1999
சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சக்தி விருது - 2007