x

jothirlatha girija

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் 1935-ஆம் ஆண்டில் பிறந்த ஜோதிர்லதா கிரிஜா, ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார். இவரது தந்தை பள்ளி ஆசிரியர் ஆவார் . பள்ளிப் பருவத்தில் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். இவரது முதல் சிறுகதை 1950-ஆம் ஆண்டில் "ஜிங்லி" என்ற பத்திரிகையில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. 1968-ல் ஆனந்த விகடனில் எழுதிய கலப்பு மணம் பற்றிய 'அரியும் சிவனும் ஒண்ணு' என்ற சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக பெரியோர்க்கான எழுத்தாளராக அறியப்பட்டார். தபால், தந்தி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றா ர். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987-ல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது. இவர், இதுவரை 500 சிறுகதைகள் , 25, குறும் புதினங்கள் 50 நாவல்கள் , 3 நெடும் நாடகங்கள், 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல மொழிபெயர்ப்பு நூல்களை எழுதிக் குவித்துள்ளார். இவர் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Related Products