x

K.Appadurai

கா.அப்பாத்துரை (24 ஜூன் 1907 – 26 மே 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரும் பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவரும் ஆவார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர, இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள். அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். இவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகியவை தமிழின் தலையாய நூல்களாகக் கருதப்படுகின்றன. ‘தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள்’ என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மற்றும் நூல்கள் மூலம் முன்வைத்தார். இந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார். திருநெல்வேலி, ‘மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி ‘யில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’ - குருகுலப் பள்ளியில் அப்பாத்துரையாத் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது, கவிஞர் கண்ணதாசன் இவரிடம் மாணவராகப் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஒன்றிய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 வரைய பணியாற்றினார். அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் அந்த ஒன்றிய அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். மேலும், தமிழ்நாடு வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார். ‘திராவிடன்’, ‘ஜஸ்டின்’, ‘இந்தியா’, ‘பாரததேவி’, ‘சினிமா உலகம்’, ‘லிபரேட்டர்’, ‘விடுதலை’, ‘லோகோ பகாரி’, ‘தாருஸ் இஸ்லாம்’, ‘குமரன்’, ‘தென்றல்’ முதலிய இதழ்களில் இவரது பணி தொடர்ந்தது. அப்பாத்துரையார் இந்திமொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாய பாடமாகத் திணிக்கப்பட்டபொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார். தந்தை பெரியார் தலைமையில் 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும்பங்கு கொண்டனர். “கிரேக்க இலத்தீன் மொழிகள், அரபு எபிரேய மொழிகள், சமஸ்கிருதம், முதலிய எல்லா உலக மொழிகளிலும் மொழிக்கு மட்டுமே இலக்கணம் உண்டு. இலக்கியத்துக்கு இலக்கணம் இல்லை, தமிழ் மொழியில் மட்டுமே, தொடக்கக் காலத்திலிருந்து மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் உண்டு.” “உலக வழக்கும், செய்யுள் வழக்கும் இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் குறிக்கப் பெற்றது தமிழ் மொழியில் மட்டுமே.” தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே, எழுத்துக்களின் தொடர்ந்த ஒலிப்பு வேறாகவும், சொல்லின் ஒலிப்பு வேறாகவும் இருந்ததில்லை.” என தமது ஆய்வுகளின் மூலம் ‘தமிழின்’ சிறப்புத் தகுதிகளை உலகிற்கு பறைசாற்றிய பன்மொழிப் புலவர்` அப்பாத்துரையார், 1989-ஆம் ஆண்டு தனது 82-வது வயதில் மறைந்தார்.

Related Products