x

K.Chinnappa Barathi

கு.சின்னப்ப பாரதி, (மே 2, 1935 - ஜூன் 13, 2022) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பட்டி என்னும் கிராமத்தில் மத்தியதர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடைய பள்ளி காலத்திலேயே சிறப்பான நூல் நிலையங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் படிக்கும் வாய்ப்புகள் பெற்றவர். வகுப்பு வாரியாக வாரம் ஒருமுறை நூலகத்திற்குச் சென்று படிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு நூல்களைப் படிக்க நல்ல வாய்ப்பாக சிறுவயதிலேயே அமைந்தது. நாமக்கல்லில் உள்ள கந்தசாமி படையாட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில்தான் எழுத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. அவருடைய பேராசிரியராக இருந்த மு.வரதராசன் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொழுதே அவருக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அந்த காலத்தில், விவசாயிகள் போராட்டம், வரி உயர்வுப் போராட்டம் போன்றவைகள் நடந்த வண்ணம் இருந்தன. நில உச்சவரம்புப் போராட்டத்திற்காக 650 கிலோ மீட்டர் நடைபயணம் சென்றார். இதுபோன்ற போராட்ட அனுபவங்கள் அவருக்கு எழுதுவதற்கான எண்ணங்களும் கருத்துக்களும் தோன்ற காரணமாக இருந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் மற்றும் குடியுரிமை பற்றிய போராட்ட அனுபவம் குறித்து எழுதிய சிறுகதை தான் அவருடைய முதல் படைப்பு. அந்த கதை, கவிஞர் K.C.S. அருணாச்சலம் நடத்திய பத்திரிகையில் முதன்முதலில் வெளிவந்தது. ஏறக்குறைய சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு எழுதத் தொடங்கிய தோழர் கு.சின்னப்ப பாரதியின் படைப்புகள், இதுவரை 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Related Products