Keeranur Zakir Raja
கீரனூர் ஜாகிர்ராஜா (பிறப்பு: அக்டோபர் 8, 1962) தமிழ் எழுத்தாளர். பழனிக்கு அருகில் உள்ள கீரனூரில் பிறந்த இவர் 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரிலிருந்து தன்னுடைய எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். அதிகம் அறியப்படாத தமிழ் இஸ்லாம் சமூகத்தின் வாழ்க்கையை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தியவர். 2004-ஆம் ஆண்டு இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து வெளிவந்த 'மீன்காரத்தெரு' நாவல் தமிழ் முஸ்லிம்களில் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டியது. கருத்த லெப்பை, துருகித் தொப்பி, வடக்கேமுறி அலிமா, மீன்குகை வாசிகள், ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ள ஜாகிர்ராஜா 4 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைத் தொகுப்புகள், 6 தொகை நூல்கள், குழந்தை இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். தனது எழுத்துப் பணிக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட 15 விருதுகள் பெற்றுள்ளார்.