Ki.Va.Jaganathan
கி.வா.ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். கம்பன் கழகம் இவரது நினைவாக கி.வா.ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது. கி.வா.ஜகந்நாதன் தன் 14-ஆவது வயது முதல் செய்யுள்கள் எழுதத் தொடங்கினார். சிதம்பரம் நடராஜர் மேல் போற்றிப்பத்து என்னும் செய்யுள் கோவையை எழுதினார். அவருடைய முதல் படைப்பு அது. ஜோதி என்னும் புனைபெயரில் அவர் எழுதிய செய்யுள்கள் அக்காலத்தைய இலக்கிய இதழ்களான தமிழ்நாடு போன்றவற்றில் வெளியாகின. சுதந்திரப்போரால் கவரப்பட்டார். காந்திய ஈடுபாடும் கொண்டார். இறுதிநாள் வரை கதர் அணிந்து வந்தார். கி.வா. ஜகந்நாதன் திருக்குறள் உரைகள் அனைத்தையும் பாடபேதம் பார்த்து, பிழைநோக்கி திருக்குறள் விளக்கு என்னும் ஒரே நூலாக பதிப்பித்தார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பெரியபுராணம் போன்ற நூல்களுக்கு விளக்கவுரைகளும் அறிமுகங்களும் எழுதினார். கி.வா.ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியர் பொறுப்பில் 1932 முதல் அவர் மறைவது வரை 53 ஆண்டுகள் இருந்தார். கலைமகளில் மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினர். அகிலன், பி.வி.ஆர், ஆர்.வி ஆகிய அக்காலத்தைய எழுத்தாளர்கள் கலைமகளில் தான் அறிமுகமானார்கள். பின்னர் குடும்ப இதழாக கலைமகள் மாறியபோது, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். கி.வா. ஜகந்நாதன் நவம்பர் 4, 1988 அன்று சென்னையில் மறைந்தார்.. 1967-ல் இவரது ‘வீரர் உலகம்’ என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.