Komal Swaminathan
கோமல் சுவாமிநாதன், (பிறப்பு: ஜனவரி 27, 1935 ) நாடகம் மட்டுமல்லாமல் சினிமா, பத்திரிகை என பன்முக ஜனரஞ்சகத் தளங்களில் சமூக பொறுப்புமிக்க கலைஞராக இயங்கியவர்.இவரது சொந்த ஊர் பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகிலுள்ள கோமல் என்ற சிற்றூர். பின்னாளில் அவரது பெயருக்கு முன்னே இடம்பிடித்து அவரை அடையாளப்படுத்தியது. பள்ளிப்பருவம் குளித்தலை, திருப்பத்தூர், காரைக்குடி, பெரியகுளம் என்று பல்வேறு இடங்களில் கழிந்தன. அந்தப் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களே பிற்காலத்தில் அவரை எழுத்தாளராக்கியது. பள்ளிப் படிப்பை முடித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் நிறைவு செய்தார். தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. வணிகவியல் பள்ளியில் டிப்ளமோ பயின்றார். பின்னர் நாடகவியலில் கொண்ட ஆர்வம் காரணமாக, நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். நாடகத்திற்கு வசனம் எழுதுவது பற்றிய நுணுக்கங்களை சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, என்.வி. ராஜாமணி, கலாசாகரம் ராஜகோபால் ஆகியோரிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். நாடகங்களிலும் நடித்தார். நூலகங்களுக்குச் சென்று வாசிப்பதும் தொடர்ந்தது. 1971 இல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார். அதன் மூலம் 'சன்னதித் தெரு' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இவரது 'நவாப் நாற்காலி' பரவலாகப் பாராட்டப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. இவரது நாடகங்களில் குறிப்பிடத் தகுந்தது 'தண்ணீர் தண்ணீர்'. அந்நாடகம் அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்து அகில இந்திய அளவில் கோமல் சுவாமிநாதனை அடையாளம் காட்டியதோடு, 250 முறைக்குமேல் மேடையேறியது. பேராசிரியர் எஸ்.சங்கர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பி.சி. ராமகிருஷ்ணாவின் மெட்ராஸ் பிளேயர்ஸால், நாடகமாகவும் நடத்தப்பட்டது. 1981-ல் இந்நாடகத்தை இயக்குநர் கே.பாலசந்தர் திரைப்படமாக எடுத்தார். சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டு இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 'கற்பகம்', 'கைகொடுத்த தெய்வம்', 'பேசும் தெய்வம்' மற்றும் அவருடைய பல வெற்றிப்படங்களிலும் வசன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும், இந்தியில் தயாரிக்கப்பட்ட "சாரதா' படத்திலும் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் தேவர் பிலிம்ஸின் இந்தித் திரைப்பட கதை விவாதங்களில் கலந்துகொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். ‘பாலூட்டி வளர்த்த கிளி’, ‘குமார விஜயம்’,"சாதிக்கொரு நீதி" என்று பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார். "யுத்தகாண்டம்", "அனல் காற்று", "ஒரு இந்திய கனவு", "நவாப் நாற்காலி” என நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். வணிக சினிமாவில் பணியாற்றிக் கொண்டே மாற்று சினிமாவைப் பற்றிய கனவிலிருந்தவர். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’யைப் போல தமிழிலும் சினிமாக்கள் வரவேண்டும் என விரும்பியவர். தமிழக அரசு 1977-ல் இவருக்கு கலைமாமணி விருது தந்து சிறப்பித்தது. இவர் இயக்கிய "ஒரு இந்தியக் கனவு" திரைப்படம் 1983 ஆம் வருடம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றெடுத்தது.1960-களிலேயே இதழியலில் ஆர்வம் கொண்டு சி.சு.செல்லப்பா அவர்களின் "எழுத்து" இலக்கிய இதழ் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். பின்னாளில் ஸ்ரீராம் குழுமத்தின் "சுபமங்களா" என்ற ஜனரஞ்சக பெண்கள் இதழுக்கான ஆசிரியர் பொறுப்பு கிடைத்த போது அதை மூத்த எழுத்தாளர்களுக்கும், சிற்றிதழ்களில் இயங்கிவந்த இளைய எழுத்தாளர்களுக்கும், ஈழ எழுத்தாளர்களுக்குமான பொதுவான தளமாகவும், கவிதைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், பயணக் கட்டுரைகள், அறிவியல் விளக்கங்கள் என 90-களின் இளைஞர்களுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் விதமாக வெற்றிகரமான இலக்கிய இதழாக வளர்த்தெடுத்தார். அதில் வெளியான தேரந்தெடுத்த நேர்காணல்களை, "கலைஞர் முதல் கலாப்ரியா வரை" என்ற தலைப்பிலும், தன்னுடைய வாழ்நாள் அனுபவங்களாக எழுதிய "பறந்து போன பக்கங்கள்" தொடர் கட்டுரைகளும் நூல்களாக வெளிவந்தன. "சுபமங்களா வாசகர் வட்டம்" என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகளையும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி இளையதலைமுறைக்கு இலக்கிய ஆர்வத்தை தூண்டினர்.