Krishna Davinci
வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். ‘சுகந்தி’ என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர்டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி ‘கிருஷ்ணா டாவின்சி’ என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறி விட்டார். ‘மாயக்குதிரை’ என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே, குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதல் பொறுப்பாசிரியர். திரைப்படத் துறையிலும், எழுத்துலகிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர். 28 நெடுங்கதை நாவல்கள், 50 சிறுகதைகள் மற்றும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். காய்ச்சல் காரணமாக 2012 –ஆம் 44 – வது வயதில் காலமானார்.