x

Ma.Kamuthurai

ம.காமுத்துரை ம.காமுத்துரை (பிறப்பு: செப்டம்பர் 16, 1960) தமிழ் எழுத்தாளர். தமிழில் வெளியாகும் பல பத்திரிகைகளில் சிறுகதைகள், நாவல்கள் என 1980-களில் இருந்து எழுதி வருகிறார். தேனியில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். எளிய குடும்பத்துப் பின்னணியில் பிறந்து, வளர்ந்த ம.காமுத்துரை தேனி அல்லிநகரத்தில் வசிக்கிறார். பள்ளிக்கல்வி முடித்து ஐ.டி.ஐ. பயிற்சி பெற்று, வெல்டராக தன் தொழில் வாழ்வினைத் துவங்கியவர், தபால் சேகரிப்பவர், மருந்துக்கடை பணியாளர், செருப்புக்கடை பணியாளர், ஒர்க் ஷாப்பில் உதவி ஆள், ஸ்பின்னிங் மில் தொழிலாளி, ரொட்டி வியாபாரம், தையல் கடையில் காஜா பையன், செய்தித்தாள் மற்றும் புத்தகம் வினியோகிப்பாளர் என்று பத்துக்கும் மேற்பட்ட சிறு - குறு தொழில்களைச் செய்து, தற்போது வாடகைப் பாத்திரக்கடையை நடத்தி வருகிறார். அவரது தங்கை வாசிப்பதற்காக நூலகத்திற்குள் நுழைந்த ம.காமுத்துரை குரும்பூர் குப்புசாமி, அனுராதா ரமணன், புஷ்பா தங்கதுரை, தாமரை மணாளன், மகரிஷி, லட்சுமி, பாக்கியம் ராமசாமி, தேவன் நாவல்கள் வழியாக மு.வரதராசனாரின் நாவல்களை வாசிப்பின் துவக்கநிலையில் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். ம.காமுத்துரையின் படைப்புலகம் விளிம்புநிலை மக்களுடையது. இதுவரை தமிழிலக்கிய உலகம் சந்தித்திராத பாத்திரங்களை பதிவு செய்கிறது. ம.காமுத்துரையின் படைப்புகளை ஆய்வு செய்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினையும், கவிஞர் ஜோதிபாரதி அவர்கள் முனைவர் பட்டத்தினையும் பெற்றிருக்கிறார்கள். இவருடைய ’கிட்டுணன்’ சிறுகதை லண்டனிலுள்ள பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஆங்கில சிறுகதைகள் தொகுப்பில் எழுத்தாளர் திலீப்குமாரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. ’லூஸ் ஓனர்’ சிறுகதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் உருதுமொழிப் பிரிவினரால் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கலைஞன் பதிப்பகம் மலேசியாவின் மலேயாப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இவருடைய “மிகினும் குறையினும்” சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாவட்டப் பொறுப்புகளிலும், மாநிலக் குழுவிலும் பணியாற்றி, தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.

Related Products