Melanmai Ponnusamy
மேலாண்மை பொன்னுசாமி (1951 - 30 அக்டோபர் 2017) தமிழக சிறுகதை, மற்றும் நாவல் எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவருக்கு 10 வயதான போது தந்தை இறந்து விட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசித்தார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்தி வந்தார். 5-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால், இவர் எழுதத் தொடங்கினார். மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல் தொகுப்புகள் அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். இவரது கதைகள் பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்த இவர், அச்சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தார். இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான். 2017 அக்டோபர் 30 அன்று சென்னையில் காலமானார். இவர் எழுதிய ‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 2007-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.