M.Murugesh
மு.முருகேஷ் முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதி வரும் தமிழ் எழுத்தாளர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமத்தில் வாழ்கிறார். குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஹைக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்துவரும் படைப்பாளியாகவும் தொடர்ந்து இயங்குகிறார். அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளைச் சொற்சிக்கனத்தோடு படைப்புகளாக்கி வருவது இவரது இயல்பாகும்.முருகேஷின் படைப்புகளில் இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். முருகேஷ் எழுதிய நூல்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில்ஹைக்கூவிற்கு ஒரு தனியிடம் உருவாக்குவதற்காக முயன்றவர்களில் முருகேஷும் ஒருவர் எனலாம். தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்திலும் முருகேஷ் பங்களிப்பு செய்துள்ளார். கேரள மாநில அரசின் அழைப்பின் பேரில் திருச்சூரில் நடைபெற்ற எழுத்தச்சன் விழாவின் கவிதை வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். 2012-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 2013-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகப் படைப்பாளர்கள் கருத்தரங்கில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்கேற்றார். விசயவாடாவில் இந்திய அரசின் சாகித்திய அகாதமி நடத்திய ‘சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்கும்’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில் பங்கேற்று கட்டுரை வாசித்தார். இவருக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான குழந்தை இலக்கியத்துக்கான பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.