x

M.Rasamanikkanar

மா.இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும், பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார். அரசுப் பணியாளரான தந்தையார் அலுவல் காரணமாகப் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டதால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது. பல ஆண்டுகள் வரையில் தற்போதைய ஆந்திர மாநில கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் இருக்க நேரிட்டதால் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியே பயின்ற இவர், 1916-ல் தந்தையார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்ட பிறகே தமிழ் பயிலத் தொடங்கினார். 1928 ஆம் ஆண்டு சென்னை வந்து, வண்ணாரப் பேட்டையிலுள்ள தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கு கண்ணம்மாள் என்பவரைத் தன் 23ஆவது வயதில் மணந்தார். 1928 - 1936 வரையில் தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்க்கான பாடநூல்களையும் துணைப்பாட நூல்களையும் எழுதினார். அப்போது இவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. 1935-ல் இராசமாணிக்கனார் வித்துவான் பட்டம் பெற்றிருப்பினும் அதற்கு முன்னரே பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டிருந்தார். எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று பி.ஓ.எல், எல்.டி., எம்.ஓ.எல் ஆகிய பட்டங்களை முறையே 1939, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் பெற்றார். எம்.ஓ.எல் பட்டத்திற்குப் பெரியபுராணத்தை நன்கு ஆய்வு செய்து, பெரியபுராண ஆராய்ச்சி என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வு நூலே பெரிய புராண ஆராய்ச்சி என்னும் நூலாகப் பின்னாளில் வெளியாகியது. மேலும் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, சிந்து சமவெளி நாகரிகம் போன்ற நூல்களையும் இக்காலத்திலேயே எழுதினார். 1959 முதல் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழக துணைத்தமிழ் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அக்காலத்தில் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டை ஆய்ந்து இவர் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூல் இவரது மறைவுக்குப் பின்னர் 1970ல் அப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இவர் 20-க்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Related Products