Mu.Varadarajan
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மு.வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றி, பல சிறுகதைகள் மற்றும் நாவல்களையும் எழுதியுள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய இவர், பன்முக ஆற்றல்கள் கொண்டவராவார். மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்குப் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும், தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ.வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். உடல்நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காகக் கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். 1931-ல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935-ல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1939-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக்கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944-இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1948-ல் சென்னை பல்கலைக் கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ.என்பது குறிப்பிடத்தக்கது. 1939-ல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945-ல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948-ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1971-ல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, 1974 வரை சிறப்புற பணியாற்றினார். 91 நூல்களை எழுதிய மு.வ. 1974-ஆம் ஆண்டு, தனது 62-வது வயதில் மறைந்தார். இவர் எழுதிய ‘அகல்விளக்கு’ என்னும் நாவலுக்கு 1961-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.