Nagoor Rumi
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ.எஸ். முகம்மது ரஃபி (பிறப்பு: மார் 23, 1958) தமிழ் எழுத்தாளர். இவர் நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் . இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணி டாட்.காமின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் நலம் நலமறிய ஆவல் என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது. இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இஸ்லாத்தைக் குறித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ”இந்த விநாடி”, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும்.