Neela Padmanabhan
நீல பத்மநாபன் (பிறப்பு: ஏப்ரல் 26, 1938, கன்னியாகுமரி மாவட்டம்), தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் இண்டர்மீடியட் தேறினார். கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று பி.எஸ்.சி பட்டம் பெற்றார். பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் பட்டம் பெற்றார். 1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து 1993-ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக பணி ஓய்வு பெற்றார். எழுத்து பற்றி அவர் கூறும் பொழுது, "கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத் தெரியாத தன்மையில் சிலிர்த்துப் போய் நேரிலும் பார்ப்பவைகள் மற்றும் சொல்லிக் கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப் போல் சாதாரண ஆசை - நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை, வெறுப்புகளை பரிமாறிக் கொள்ளவே நான் எழுதுகிறேன்" என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு. இவர் எழுதிய, ‘இலையுதிர் காலம்’ நாவலுக்காக 2007-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.