x

N.Murugesa Pandian

ந.முருகேசபாண்டியன் (பிறப்பு: 1957) மதுரை மாவட்டம், சமயநல்லூர் கிராமத்தில் பிறந்தார். இவர் எழுபதுகளின் இறுதியில் வெளியான தேடல் இதழில் கவிஞராகச் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமானவர் ஆவார். இலக்கிய விமர்சனத் தளத்தில் இயங்கிவரும் இவர், உயிர்மை இதழில் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் பரவலாகக் கவனம் பெற்றது. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் (2003) சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. சொற்கள் ஒளிரும் உலகம் (2007) நூலானது 2007-ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்ற நூலில் சங்க இலக்கிய பெண் கவிஞர்களிலிருந்து ஆண்டாள் வரை எல்லோரது பாடல்களையும் தொகுத்து உரையெழுதியிருக்கிறார். புத்தக வாசிப்பின் வழியாகத் தன்னிருப்பை அடையாளம் காண்கிற இவர் மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நூலகராகவும், நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய நெறியாள்கையின் கீழ் நூலகம் தகவல் அறிவியல்துறையில் 24ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்சமயம் மதுரையில் வசித்துவரும் இவர் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் என்ற காலாண்டிதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். தமிழ்த் திறனாய்வை நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகுகின்ற இவர் இலக்கியக் கூட்டங்களில் திறம்பட உரையாற்றுவதில் வல்லவர்.

Related Products