Osho
ஓஷோ,1931 டிசம்பர் 11-ல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு, பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார். ஓஷோவுடைய இயற்பெயர் ரஜ்னீஷ் சந்திரமோகன். 1956-ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெற்றார். அவர் தனது பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.1957-ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1958-ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவப் பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கு கல்வி கற்பித்தார். ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.இவரது சொற்பொழிவுகள் முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. ஓஷோ, 1990-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் நாள், தனது 59-வது வயதில் மறைந்தார்.