x

Pa.Jayaprakasam

பா.செயப்பிரகாசம் (1941 - அக்டோபர் 23, 2022) தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர், தொகுப்பாசிரியர், கவிஞர். கரிசல் மண்ணின் வாழ்வியலையும் அரசியல், சமூக கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். 'ஒரு ஜெருசலேம்', 'காடு' ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. பொறுப்பாசிரியராக இருந்து 'மனஓசை' இதழை நடத்தினார். சூரியதீபன் என்னும் புனைபெயரில் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதினார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற மாணவர் அணித் தலைவர்களுள் ஒருவர். தமிழக அரசின் செய்தித்துறையின் இணை இயக்குனராகப் பணியாற்றினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ராமச்சந்திராபுரத்தில் பிறந்தார். ஐந்து வயதில் தாயார் காலமானார். ஆரம்பக் கல்வியைத் தன் பாட்டியின் ஊரான அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சென்னம்மரெட்டிபட்டியில் பெற்றார். உயர்நிலைக் கல்வியை மதுரைக் கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் ((Madura College Higher Secondary School) முடித்தார். 1960-களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சரத் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, பஷீர், பொற்றேகாட், தகழி போன்றவர்களின் படைப்புகளில் தன் வாசிப்பைத் துவங்கினார். பா.செயப்பிரகாசம் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஒளவை துரைசாமி, இலக்குவனார், அ. கி. பரந்தாமனார் ஆகியோர் பா.செயப்பிரகாசத்தின் ஆசிரியர்களாக அமைந்தனர். ஜி. நாகராஜனின் நட்பால் நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் வளர்ந்தது. மு. காளிமுத்து, சேடப்பட்டி முத்தையா போன்றோருடன் இணைந்து மாணவப் பருவத்தில் 1965-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் பா.செயப்பிரகாசமும் ஒருவர். சிறந்த மேடைப்பேச்சாளராகத் திகழ்ந்தார். பா. செயப்பிரகாசம் சேலத்தில் பணியாற்றும்போது தமிழ்நாடனுடனும் கவிஞர் இன்குலாபுடனும் ஏற்பட்ட நட்பு மார்க்ஸியத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. 'கார்க்கி' இதழில் பா.செயப்பிரகாசத்தின் முதல் கட்டுரை 'பட்ட மரங்களும் பூப்பூக்கும்' வெளிவந்தது. இயற்பெயரில் சிறுகதைகளும் 'சூரியதீபன்' என்ற புனைபெயரில் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதினார். முதல் சிறுகதை 'குற்றம்' தாமரை இதழில் வெளிவந்தது. 'சிகரம்', 'சுவடு', 'நீலக்குயில்' 'சதங்கை',கண்ணதாசன் போன்ற இதழ்களில் கதைகள் எழுதினார். தி.க. சிவசங்கரனின் ஊக்கத்தினால் தாமரை இதழில் பல கதைகள் எழுதினார். சமூக யதார்த்தங்களே அவரது கவிதைகளின் பாடுபொருளாகவும் அமைந்தன. பா.செயப்பிரகாசத்தின் 'மகன்' சிறுகதை தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் 12-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம் பெற்றது. அவரது 'காடு' கதைத்தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இளங்கலை தமிழ்ப் பாடத்திற்கான பாடநூலாக இருந்தது. பா.செயப்பிரகாசத்தின் படைப்புகளில் சில முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 'பா.ஜெயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்' (மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - மார்ச் 2007), 'பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும்' (2004) - இரு ஆய்வுகளும் குறிப்பிடத்தக்கவை.

Related Products