x

Pa.Raghavan

பா.ராகவன் (பிறப்பு: 1971) தனது பள்ளிப் படிப்புக்குப் பிறகு சென்னை தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். அச்சமயமே பா.ராகவனின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்து, சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக்கொண்டது. பள்ளி நாள்களிலேயே எழுத்தார்வம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் கவிதைகள், துணுக்குகள் எழுத ஆரம்பித்தார் பா.ராகவன். இவரது முதல் எழுத்து முயற்சியான ஒரு குழந்தைப் பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை. 1989-ஆம் ஆண்டு எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும், நட்பும் கிட்டிய பிறகே எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டதாகச் சொல்கிறார். 1990-ஆம் ஆண்டு, கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்த கணையாழி மாத இதழில் இவரது சிறுகதை ஒன்று பிரசுரமானது. எழுத்துலகில் பா.ராகவன் கவனம் பெற அதுவே காரணமாக இருந்தது. 1992-ஆம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய 'மொஹஞ்சதாரோ' என்ற சிறுகதை அன்றைய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பாக எழுந்த கலவரங்களை மையப்படுத்தி, நையாண்டி கலந்த விமரிசனத்தை முன்வைத்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அச்சிறுகதையின் வாயிலாகவே பா.ராகவன் பத்திரிகைப் பணிக்குள் நுழைந்தார். 1992-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2000-வது ஆண்டு வரை கல்கி வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு குமுதம் வார இதழில் மூன்றாண்டுக் காலம் பணிபுரிந்தார். குமுதம் ஜங்ஷன் இதழ் தொடங்கப்பட்ட போது அதன் ஆசிரியரானார். 2004-ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையை விட்டு விலகி, பதிப்புத் துறையில் பணிபுரியத் தொடங்கினார். 'நியு ஹொரைசன் மீடியா' நிறுவனத்தின் கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தின் 'நலம்', 'வரம்', 'ப்ராடிஜி' உள்ளிட்ட அனைத்துத் தமிழ் பதிப்புகளையும் திறம்படத் துலக்கம் பெறவைத்தார். தமது பதிப்பாசிரியர் பணிக்காலத்தில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ்ப் பதிப்புத் துறையில் 'கிழக்கு பதிப்பக'த்தின் தோற்றமும் பா. ராகவன் அதில் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புத்தகங்களும் இன்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. 2011-ஆம் ஆண்டின் மத்தியில் பதிப்புத் துறையில் இருந்து விலகிய பா.ராகவன் அதன்பின் முழு நேர எழுத்தாளராக உள்ளார். இதுவரை பதினான்கு நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட தொலைகாட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதியுள்ளார். கனகவேல் காக்க,, தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011] ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

Related Products