Pazhani Bharathi
Pazhani Bharathi
பழநிபாரதி (பிறப்பு:14 ஜுலை) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் போர்வாள், நீரோட்டம், தாய், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு, 'தை' என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதித் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். நீரோட்டம், போர்வாள், அரங்கேற்றம் போன்ற நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் பிழை திருத்தும் பணியில் இருந்தார். வலம்புரிஜானின் தாய் பத்திரிகையில் இவருக்குப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. இவருடைய நெருப்புப் பார்வைகள் என்கிற முதல் கவிதைத் தொகுதியை வலம்புரிஜானிடம் ஏற்கனவே கொடுத்திருந்தார். இவருடைய இருபது வயதில் சூரியனையும் அடுப்பையும் தவிர எந்தத் தீயும் வெப்பமும் என் தேசத்தை வருத்தப்படுத்தக் கூடாது என்ற வரிகளை வாசித்துப் பாராட்டிய, வலம்புரிஜான் அடுத்த வாரமே தாய் வார இதழின் தலையங்கத்தில் புகழ்ந்து எழுதியதுடன் பணியும் தந்தார். பணி செய்துகொண்டே படிக்கலாம் என்று கருதி, தமிழ் இளங்கலை இலக்கியம் (பி.லிட்) பயில, சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் இணைந்தார். ஆனால் முதல் தேர்விலேயே தேர்வெழுதாமல் வெளியேறினார்.அதன் பின்னர் படிப்பைத் தொடரவில்லை. சில ஆண்டுகளில் தாய் வார இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வலம்புரி ஜான் விலகவே, இவரும் விலக நேர்ந்தது. பின்னர் பலவேறு பத்திரிகைகளிலும், அச்சகங்களிலும் தொடர்ந்து பணி செய்தார். இவர் இதுவரை1500 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.