Poomani
பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பூமணி, கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர் ஆவார். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி.கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971-ல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய ‘கருவேலம்பூக்கள்’ திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘வெக்கை’ நாவலின் கதை, இயக்குனர் வெற்றிமாறனால் ‘அசுரன்’ என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டு, 2019-ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது