Puliyur Murugesan
புலியூர் முருகேசன் (பிறப்பு: 5.5.1970), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிசெட்டியூரிலுள்ள ஆனைப்பட்டி எனும் ஊரில் பிறந்தார். புலியூரிலுள்ள கவுண்டன்பாளையம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், கரூரிலுள்ள பசுபதீஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்து வகுப்புகளையும், கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 11,12 ஆம் வகுப்புகளையும் பயின்றார். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையிலுள்ள அரசு கல்லூரியில் பி. எஸ்.சி (வேதியியல்) பட்டப்படிப்பை படிக்கத் தொடங்கி சூழல் காரணமாக அதை நிறைவு செய்ய இயலாமற்போனது. கொசுவலை ஏற்றுமதி வியாபாரம், எல்.ஐ.சி முகவர் என இயங்கியவர் தற்போது தஞ்சாவூரில் "தோழர் மெஸ்" என்ற அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார். சமைப்பதில் மிகுந்த ஆர்வமும், ஆண்களும் சமைக்க வேண்டும் என்ற கருத்தும் கொண்டவர். தனது 18-ஆம் வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது இவரது நண்பர் விஜயகுமாரின் மூலம் புத்தக வாசிப்பு அறிமுகமாகியுள்ளது. நண்பர் விஜயகுமார் தனது ஊரிலிருந்து தினம் இரண்டு புத்தகங்களை எடுத்து வந்து கொடுக்க, இவரும் படிக்க என ஓராண்டு முழுவதும் தீவிர வாசிப்பு தொடர்ந்துள்ளது. அன்று அவர் வாசித்த சோவியத் குழந்தை இலக்கியங்கள், இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் வாசிப்பினால் 1991-ஆம் ஆண்டு எழுதத் துவங்கியுள்ளார். முதலில் தனது எழுத்துப் பயணத்தைக் கவிதைகளில் துவங்கியவர் "ஒரு தோழியின் வாசலில்" என்கிற கவிதைத் தொகுப்பை 1991-ஆம் ஆண்டு வெளியிட்டார். 2012-ஆம் ஆண்டில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் "சொல்லவே முடியாத கதைகளின் கதை" புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு அவரின் அத்தனைச் சிறுகதைகளையும் தேடி வாசித்தவருக்கு, சிறுகதைகள் எழுதும் புதுவடிவம் பிடிபட்டிருக்கிறது. அதன் பின் தீவிரமாக சிறுகதைகளை எழுதத் துவங்கியுள்ளார். இவரது "சிங்கம் ப்ராஜெக்ட்" என்ற சிறுகதை முதன்முதலாக 2013-ஆம் ஆண்டு 'குறி' எனும் சிற்றிதழில் பிரசுரமாகியிருக்கிறது. அதை தொடர்ந்து இவரது ஏனைய சிறுகதைகள் உயிர்எழுத்து, உயிர்மை, நிலவெளி, காமதேனு, குங்குமம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகியிருக்கிறது. சமகால அரசியல், சாமானியர்களின் சங்கடங்கள், சமூகச் சிக்கல்கள், சாதிய ஒடுக்குமுறைகள், மானுட உளவியல், வரலாற்றுப் பிழைகள் என பல்வேறு கூறுகளையும் எந்தவிதப் பூசலுமின்றி அப்படியே வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை புலியூர் முருகேசனின் படைப்புகள். எழுத்துக்காக, அதனால் புடமிடப்படும் மனங்களுக்காக தனது மண்ணையும், மக்களையும் பிரிந்து வாழ்கிறார். அந்நிலையிலும் எழுதுவதே உயிர்ப்பு என எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் புலியூர் முருகேசனின் காத்திரமான படைப்புகளை இலக்கிய உலகில் தவிர்க்க முடியாதவை ஆகும் .