R. Chudamani
ஆர்.சூடாமணி (10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். 1931-ல் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் சூடாமணி. சூடாமணி இளம் வயதிலேயே பெரியம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றினார். இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது. 1960-ல் தனது மனதுக்கு இனியவள் என்ற நாவலை எழுதினார். ‘இருவர் கண்டனர்’ என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்தியத்தர வாழ்க்கையையும், அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். ‘இரவுச்சுடர்’ என்ற இவரது கதை “யாமினி” என்ற பெயரில் 1996-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 'சூடாமணியின் கதைகள்' என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. "உள்ளக் கடல்' என்ற நாவலையும், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சூடாமணி தானமளித்த தொகை, மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது. ‘நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணி தான்’ என்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் அறங்காவலர் நல்லி குப்புசாமி குறிப்பிடுகிறார். இவரது வீடு விற்று வந்த தொகை, 2011-ஆம் ஆண்டு ஒரு கோடியே ஐம்பது லட்சமும், 2012-ஆம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயும் ஆக, மூன்று கோடியே அறுபது லட்சம் ரூபாய், மூன்று சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.