Rajendrachozhan
இராசேந்திரசோழன் (பிறப்பு: டிசம்பர் 17, 1945) எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். அஸ்வகோஷ் என்கிற பெயரிலும் நிறைய எழுதி இருக்கிறார். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். ஆசிரியராகத் தன்னுடைய பணியைத் தொடங்கிய இராசேந்திரசோழன் அவர்கள் ஏராளமான சிறுகதைகள் எழுதினார். 1970-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ மாவட்ட அளவில் சிறப்பிதழ்கள் வெளியிட்டு, அது சார்ந்த சிறுகதைப் போட்டிகளும் நடத்தி வந்த நேரத்தில், தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டதில் இவருடைய கதை முதல் பரிசு பெற்று வெளியானது. படைப்பிலக்கியத்தின் ஊடே மார்க்சியக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டார். மதுரையிலிருந்து செம்மலர் வெளிவரத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அஸ்வகோஷ் என்ற பெயரில் அதில் நிறைய கதைகளை எழுதினார். கூடவே கசடதபற, கணையாழி, அஃக் இதழ்களிலும் எழுதினார். தீக்கதிர், செம்மலரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாய் நேரடி சமூக செயல்பாடுகள், இயக்கங்கள் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். இரண்டாண்டு காலம் சென்னைத் தோழர்களுடன் இணைந்து ‘பிரச்சனை’, ‘உதயம்’ இதழ்களை நடத்தி அதில் நிறைய எழுதினார். நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டு, தில்லி தேசிய நாடகப் பள்ளி தமிழகத்தில் திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில் 10 வார காலம் நடத்திய தீவிர நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஊதியமில்லா விடுப்பு போட்டு கலந்து கொண்டார். பயிற்சி முடிந்து நெய்வேலியில் அனல் மின் நிலையத் தோழர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழுவை ‘செஞ்சுடர் கலாமன்றம்’ என்கிற பெயரில் தொடங்கி, நகரங்களிலும், சிற்றூர் புறங்களிலும் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். ‘அறிவை சனநாயகப்படுத்துவதொன்றே அதிகாரத்தை முறியடிக்கும்’ என்கிற கோட்பாட்டை புனைவுசாரா தன் எழுத்தின் இலக்காகக் கொண்டுள்ள இவர், இந்த நோக்கில் மார்க்சியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் எழுதிய “கடவுள் என்பது என்ன?” “சொர்க்கம் எங்கே இருக்கிறது?” ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பதில் முன்னோடியாய்த் திகழ்ந்தவர்களில் ஒருவர். இவரது ‘மொழிக்கொள்கை’ என்ற நூல் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது. ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் எவ்வளவு மனிதர்களை நேசித்தான், எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டான் என்பதன் விடைதான் வாழ்வின் சாரம் என்று தன்னுடைய பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதனையே மையமாகக் கொண்டே அவரின் படைப்புகள் அமைந்திருக்கின்றன.