Ra.Ki.Rangarajan
ரா.கி.ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர் ஆவார். வரலாற்று நாவல்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், எனப் பல பாணிகளில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ரங்கராஜன் 5-10-1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார். ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் ‘சக்தி’ மாத இதழில் உதவியாசிரியராக தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம் ,வினோத் ஆகியவை அவற்றுள் சில. 'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்று நாவலாகும். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும், டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக்கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார்.
இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம், ஆனந்த விகடன் முதலான முன்னணி தமிழ் வார இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் ஒளிபரப்பாகியுள்ளன. ரங்கராஜன், ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார். இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் நடத்தி வந்த ரா,கி.ரங்கராஜன், ஆகஸ்ட் 18, 2012 அன்று மறைந்தார்.