S. Abdul Rahman
அப்துல் ரகுமான், நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். ‘கவிக்கோ’ என்று குறிப்பிடப்படுகிறார். தொடர்ச்சியான தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவரது ‘பால்வீதி’ என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும், பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960-க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா.இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ.கி.பரந்தாமனார், அவ்வை நடராசன், அ.மு.பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய ‘தமிழ்நாடு’ என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இஸ்லாமியக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961-ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என படிப்படியாக உயர்ந்து 1991-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். இவரது ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுப்புக்காக 1999-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.