Sa.Kandasamy
சா.கந்தசாமி (1940 - ஜூலை 31, 2020) தமிழக எழுத்தாளர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய ‘சாயாவனம்’ நாவல் வெளியானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இந்த நாவலை, தேசிய புத்தக அறக்கட்டளை, நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. எழுத்து மற்றும் இலக்கியம் பற்றி சா.கந்தசாமி கூறும்பொழுது, "எழுத்துக்கலை என்பது, கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றைக் கடந்து செல்லும் ஒன்றாகும். இலக்கியம் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர், ஒரு நாவலை அல்லது சிறுகதையை, தன் மொழியில் புரிந்துகொள்ள முடியும்.” என்றார். தமிழ்நாடு அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995-ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. 1998-ல் ‘விசாரணைக் கமிஷன்’ என்ற நாவலுக்காக, இவருக்குத் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. உடல்நலக்குறைவின் காரணமாக 2020, ஜூலை 31-ஆம் நாளன்று காலமானார்.