x

Sandilyan

சாண்டில்யன் (1910 - 1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவரது நாவல்கள் பல இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930-களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு.வி.க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி.சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை ‘சாந்தசீலன்’ ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். 1982 பிப்ரவரி 7-ஆம் நாள் முதல் வெளிவந்த கமலம் என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987-ல் மறைந்தார்.

Related Products