Socrates
சாக்ரடீஸ் (கி.மு. 470/469 – கி.மு 399) பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவவாதி) ஆவார். மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் முதன்மையானவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவவாதி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவவாதி என்றும், உலகத்தின் முதல் தத்துவவாதி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸ் தான் என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீஸ் நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீஸ் முரண்நகை மற்றும் சாக்ரடீஸ் வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீஸ் பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன. சாக்ரடீஸ் எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீஸ்புதிர் அல்லது சாக்ரடீஸ் வினா எனப்படுகிறது. சாக்ரடீஸ் மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன. செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும். இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீஸ் சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன. 2450 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவர் கிரேக்க நகரமான ஏதென்சில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலகட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்.சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீசிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீசின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது. செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது