S.Tamilselvan
ச.தமிழ்ச்செல்வன் (பிறப்பு: 27 மே 1954) தமிழ் எழுத்தாளரும், திறனாய்வாளரும் ஆவார். இவர் 2008-ஆம் ஆண்டு, "பூ" திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கத்தின் மதிப்புறு தலைவராகவும் செயலாற்றி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ச. தமிழ்ச்செல்வனின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ் "பாலகான சபா" என்ற நாடககுழு அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். தமிழ்ச்செல்வனின் தந்தை எம். எஸ். சண்முகம் திராவிட இதழ்களில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள். இவரது முதல் சிறுகதை "திரைச்சுவர்கள்" 1978-ல் தோழர் ஜீவானந்தம் ஆசிரியராக இருந்த "தாமரை" இதழில் வெளிவந்தது. தொடர்ந்து செம்மலர் உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவந்தார். இவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.