Suba
சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனை பெயராகும். இவர்கள் இருவரும் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர். இவ்விரு நண்பர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதைகளை சேர்ந்து எழுதியுள்ளனர், மேலும் 1979-லிருந்து அவற்றை வெளியிட்டு வருகின்றனர். இவர்களிருவரும் குறைந்தபட்சம் 450 குறுநாவல்களையும், 400 சிறு கதைகளையும், திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களுக்கு திரைக்கதைகளையும் எழுதியுள்ளனர். கனா கண்டேன், அயன் ஆகிய திரைப்படங்கள் சுபாவின் நாவல்களை தழுவி அமைந்துள்ளவை, மேலும் இவற்றின் திரைக்கதை சுபா மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோரால் எழுதப்பட்டது. கோ திரைப்படத்தின் திரைக்கதையும் சுபா மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோரால் எழுதப்பட்டது. இவர்களின் பெரும்பாலான நாவல்களில் ஈகிள் ஐ டிடக்டிவ் ஏஜென்சியின் நரேந்திரன், வைஜயந்தி ஆகிய கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும், மேலும் ஜான் சுந்தர், செல்வா, முருகேசன் ஆகியவையும் இவர்கள் உருவாக்கிய முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர்.