Su.Venkatesan
சு.வெங்கடேசன் (பிறப்பு: 16 மார்ச், 1970) மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் நாவல் எழுத்தாளரும், தற்போதைய (2019 முதல்.) மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் பிறந்தவர் சு.வெங்கடேசன், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989-ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். சு.வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் நாவலை அடிப்படைக் கதையாகக் கொண்டது. 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, 1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் என்னும் வரலாற்று நாவலுக்கு 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.